அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் கடல் பகுதியில் சூறாவளிப்புயல் உருவானது. அதற்கு ‘ஐரீன்’ என பெயரிடப்பட்டது. அந்த புயல் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாஷிங்டனில் இருந்து ஹோஸ்டன்வரை பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இயற்கை இடர்பாடுகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள நியூயார்க், வாஷிங்டன், வெர்ஜீனியா, மேரிலேண்ட் ஆகிய நகரங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அங்கு தாழ்வான பகுதியில் தங்கியிருந்த சுமார் 25 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு 7 ஆயிரம் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடுமுறையில் சென்று இருந்த அதிபர் ஒபாமா அதை ரத்து செய்து விட்டு உடனே வாஷிங்டன் திரும்பினார். புயல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் கேப் அருகே உள்ள வடக்கு கரோலினாவில் ஐரீன் புயல் கரையை கடந்தது.
சூறவளிப்புயல் மணிக்கு 500 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதைத்தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. அப்போது வடக்கு கரோலினா, புளோரிடா, வெர்ஜினீயா ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 6 லட்சம் பேர் இருளில் தவித்தனர். புயலுடன் பலத்த மழை பெய்ததால் இதனால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் வீடுகளை சுற்றி சில அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்து இருப்பதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. புயல் கரையை கடக்கும் போது நியூயார்க் நகரில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விமான நிலையங்கள் மூடப்பட்டன. மருத்துவமனைகளில் தங்கி சிசிக்சை பெற்ற நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் 200 லாரிகளில் அவசர தேவைக்கான உதவி பொருட்களை தயாராக வைத்திருக்கிறது.
0 comments:
Post a Comment